IND VS ENG : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று ரசிகர்களால் நம்பப்பட்ட சுப்மன் கில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். கடைசியாக அவர் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.
அதன் பிறகு அவர் ஒரு முறை கூட அரை சதம் கடக்கவில்லை. தொடக்க வீரராக விளையாடி வந்த கில், தாமே அணி நிர்வாகத்திடம் பேசி மூன்றாவது இடத்திற்கு வருவதாக கூறினார். இதனை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட மூன்றாவது இடத்தில் கில் கடுமையாக தடுமாறி வருகிறார்.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே பல சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கில்லுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கிறீர்கள். அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அணியில் இடம் தரப்படுகிறது. ஆனால் இது போன்ற ஒரு ஸ்பெஷல் இடம் புஜாராவுக்கு கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் புஜாரா இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார். நான் ஏன் புஜாராவை குறித்து மீண்டும் மீண்டும் பேசி வருகிறேன் என்றால் புஜாரா இடம் தான் நம்பர் மூன்றாவது. அந்த இடத்தை அவர் பல ஆண்டுகளாக வைத்திருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட புஜாரா அந்த இடத்தில் தான் விளையாடினார்.
ஆனால் அதன் பிறகு மூன்றாவது வீரராக கில் இருக்கிறார். தொடக்க வீரராக இருந்த கில், எனக்கு மூன்றாவது இடம் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். நீங்கள் விருப்பப்பட்டு தான் நம்பர் மூன்றாம் இடத்திற்கு விளையாட வந்தீர்கள். உங்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் உங்களுடைய பேட்டிங் குறித்து நீங்கள் உழைக்க வேண்டும். அவரிடம் பல திறமை இருக்கிறது.
இளம் வீரராக இருக்கிறார். இன்னும் நிறைய பாடங்களை அவர் கற்றுக் கொள்வார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் அவர் நன்றாக விளையாட வேண்டும் இல்லை என்றால் அவர் மீது கடும் நெருக்கடி ஏற்படும். பேட்டிங் செய்யும்போது உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய ரன்கள் அடியுங்கள். எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்று நீங்களே ஒரு திட்டத்தை தயார்படுத்திக் கொண்டு சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ளுங்கள்.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டால் உங்களுடைய கையை நீங்கள் பயன்படுத்தி ஷார்ட் ஆடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். ஆனால் நான்கு நாட்களுக்கு முன் உங்களால் உங்களுடைய யுத்தியை மாற்ற முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடலாம்.
உங்களுக்கு பேட்டிங் குறையை தீர்க்க சிறந்த பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் உங்களுடன் தான் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். இந்திய வீரர்களின் அணுகுமுறை மாற வேண்டும். ஏனென்றால் நான் பார்த்தவரை இரண்டு பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சுணக்கம் காட்டி வருகிறார்கள்.
அவர்களுடைய பேட்டிங் யுக்தி எதிர்பார்த்தது போல் இல்லை.
மேலும் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை பார்த்து இந்திய வீரர்கள் சிலர் பயந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். விசாகப்பட்டினத்தில் உங்களுக்கு நான்காவது சூழற் பந்துவீச்சு தேவையா என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர் வைத்து விளையாடினால் குல்தீப் பிளேயிங் லெவனுக்கு வர அது ஒரு வாய்ப்பாக அமையும். குல்தீப் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர். ஆனால் அவருடைய பந்து வீச்சை அதிரடியாக ஆட தான் இங்கிலாந்து முயற்சி செய்வார்கள். ஹைதராபாத்தில் என்ன செய்தார்களோ அதை விசாகப்பட்டினத்தில் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அணில் கும்ப்ளே கூறியுள்ளார்.