ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நம்ப முடியாத ஒரு பேரிடி வந்து இறங்கி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 420 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் மொக்கையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியின் இன்று தோல்வியை ரசிகர்கள் வச்சு செய்து வருகிறார்கள்.
பலம் குன்றிய இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு இந்தியா தோல்வியை தழுவியதற்கு காரணம் நமது பேட்ஸ்மேன்களின் மொக்கையான ஆட்டம் தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கில், ஸ்ரேயாஸ் ஐயரை எதற்கு அணியில் எடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்று ரசிகர்கள் கடுமையாக சாடி இருக்கிறார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸில் கில் டக் அவுட் ஆனது எல்லாம் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாது என்றும், இந்த இருவரையும் அணியை விட்டு உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று தனியாக ஒரு அணியை தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதில் சர்பிராஸ்கான், ரஜத் பட்டிதார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போன்று அனுபவம் வாய்ந்து புஜாரா நல்ல பார்மில் இருக்கும் போது அவர் ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்திய அணி படுதோல்வியை தழுவினாலும் ரோகித் சர்மா பிளேயங் லெவனை அடுத்த டெஸ்டிலும் மாற்றாமல் தோல்வியை தான் சந்திக்கப் போகிறார் என்று ரசிகர்கள் சாடி உள்ளனர்.