ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி போராடி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடிய விதத்தை பார்த்து இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நடந்ததோ ஆண்டி கிளைமேக்ஸ் ஆக மாறிவிட்டது. இந்தியாவுக்கு சமீப காலமாக சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணிகளிலேயே, இது மிகவும் வீக்கான அணி என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

இதற்கு முக்கிய காரணம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தது தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த அணியின் ஆலி போப் 196 ரன்கள் குவித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி இங்கிலாந்து அணிக்கு தற்போது வெற்றியை தேடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய போது விதியை மீறி நடுவர்களும் இங்கிலாந்து வீரர்களும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இந்திய அணியின் ஒன்பதாவது விக்கெட் 177 ரன்களில் விழுந்தது. அந்தக் கட்டத்தில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி விக்கெட்டுக்கு சேர்ந்த பும்ராவும் சிராஜும் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 25 ரன்களை சேர்த்தது.இந்தக் கட்டத்தில் தான் நடுவர்களும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் விதியை மீறியதாக இந்திய ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர். அதாவது நான்காவது நாள் ஆட்டம் வீசப்பட வேண்டிய ஓவர்களுக்கான நேரம் முடிவடைந்து விட்டது. ஆனால் கைவசம் இன்னும் ஒரு விக்கெட் தான் இருக்கிறது, என்பதால் கூடுதலாக விதிப்படி அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்குள் இங்கிலாந்து அணி கடைசி விக்கெட்டை வீழ்த்தி விட்டால் போட்டியை நான்காவது நாளில் முடித்து விடலாம் என்று திட்டத்தில் போட்டி நடத்தப்பட்டது.
இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மாலை நேரம் 4.30 மணிக்கு மேல் போட்டி நடைபெறும் போது வெளிச்சம் குறைவாக இருக்கும். மைதானம் மீது நிழல் விழத் தொடங்கும். இந்த தருணத்தில் சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. பேட்ஸ்மேன்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வெளிச்சம் இல்லாத நேரத்தில் பந்து வேகமாக வந்தால் அவர்களால் எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தைக் காட்டி சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த நடுவர்கள் அறிவுறுத்துவார்கள்.
இதனால் நான்காவது நாள் ஆட்டம் இறுதியில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திக் கொண்டு வந்த இங்கிலாந்து அணி, இந்திய வீரர்கள் அந்த பவுலிங்கை எளிதாக எதிர்கொள்வதை பார்த்து கடைசி ஓவருக்கு முந்தைய ஒரவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வழங்கியது. அப்போது வெயில் மறையும் தருணமாக இருந்தது. பொதுவாக இந்த கட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் நடுவர்கள் அது குறித்து எந்த தடையும் சொல்லவில்லை. இந்திய வீரர்களும் நாங்கள் எந்த சவாலுக்கும் தயார் என்பது போல் விளையாடினார்கள். ஆனால் களத்தில் நின்றது பேட்டிங் தெரியாத பவுலர்களான சிராஜும் பும்ராவும்.
பொதுவாக பேட்டிங் தெரியாத பவுலர்கள் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். இதனால், திடீரென்று மார்க் வுட்டை அந்த கடைசி கட்ட நேரத்தில் பயன்படுத்தினார் ஸ்டோக்ஸ். இது இந்திய வீரர்களின் நம்பிக்கையை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. இதனால் ஏற்பட்ட கவன சிதறல் காரணமாக தான் அடுத்த ஓவரில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது சிராஜ் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இந்த விதிமீறலை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டது தான் ஆச்சரியமாக இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.