விசாகப்பட்டினம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு எதிராக பேசி வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களுக்கு கொம்பு முளைத்து விட்டது. தலை கால் புரியாமல் பேசி வருகிறார்கள். ஒரு டெஸ்டில் வென்ற உடனே 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று பேசி வருகிறார்கள்.
மேலும் சிலர் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக சாடி வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவினாலும் இந்த தொடரை இந்தியா தான் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் முதல் டெஸ்டில் நாம் தோல்வியை தழுவினோம். அதற்காக நமது பவுலர்கள் நல்ல வீரர்கள் கிடையாது என்று அர்த்தம் இல்லை நமது பவுலர்கள் ஏற்கனவே தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். நீங்கள் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவலாம். அப்படி பெறும் தோல்வி சில சமயம் நல்லதுக்காக தான் இருக்கும். ஏனென்றால் தோல்வியின் மூலம் நாம் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.
என்னை கேட்டால் நிச்சயம் இந்த தொடரை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் மிகவும் பலமானது என்றேன். என் பேச்சில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
நான் கொல்கத்தாவில் விமானம் ஏறிய போது இந்தியாவின் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்று இருந்தது. நான் விமானத்திலிருந்து தரையிறங்கியபோது, இந்திய அணி தோல்வியை தழுவி விட்டது என்று செய்தி வந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனினும் இந்தியா மீண்டும் கம் பேக்கை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல், ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. எனினும் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பார்களா அணியில் இருக்கும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.