ஐதராபாத் : இந்திய அணியை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்யும் என அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் கடைசியாக இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது என்றால் அது இங்கிலாந்து தான்.
ஆனால் இது நடந்தது 2012 ஆம் ஆண்டு. அதன்பிறகு இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட தோற்றது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகள் எல்லாம் தங்களது சொந்த மண்ணில் வரிசையாக தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இதனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என பல வெளிநாட்டு அணிகள் கங்கணம் கட்டி அலைகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற புது யுக்தியை பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மெதுவாக தான் விளையாட வேண்டும் என்ற விதியை உடைத்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் பின் தங்கிய நிலையிலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் ஆலிபோப்க்கும், பந்துவீச்சில் டாம் ஹார்ட்லி இருந்தார்கள்.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் இரண்டாம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர் இந்த தொடரில் ஆலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி தொடர்ந்து இதே போல் விளையாடி வந்தால் நிச்சயம் இந்தியாவை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நிச்சயமாக இது நடக்கும். ஆனால் ஆலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி இதே போல் தொடர்ந்து விளையாட வேண்டும். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 190 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி நிச்சயம் தோற்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆலி போப் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடி இருக்கிறார்.
இது போல ஒரு ஆட்டத்தை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இங்கிலாந்தின் ஆட்டத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமலே ரோஹித் சர்மா நின்றார். இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக ஆடுவதை முதலில் இந்திய அணி நிறுத்த வேண்டும். இதுவே விராட் கோலி விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்து அணி வீரர்களிடம் சென்று வம்பு இழுத்து இருப்பார். ஏதேனும் பேசி அவர்களுடைய கவனத்தை சிதைத்து இருப்பார். எங்கே மீண்டும் இதே போல் விளையாடி எங்கே இந்த ஷாட்டை திரும்பி அடி என்று இங்கிலாந்து வீரர்களிடம் பேசி இருப்பார்.
ஆனால் இந்த இங்கிலாந்து அணி தோல்வியை நினைத்து எல்லாம் பயப்படுவதே கிடையாது. தோற்றாலும் அவர்கள் அடுத்த நான்கு போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பதை தான் யோசிப்பார்கள். முதல் போட்டியில் வென்றால் கூட அடுத்த நான்கு போட்டியில் தோற்று விடுவோமோ என்ற அச்சம் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இருக்காது. வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணி பெரும் மிகப்பெரிய வெற்றியாக முதல் டெஸ்ட் போட்டியை நான் கருதுகிறேன்.
இது இங்கிலாந்தில் மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஏதோ உலக கோப்பையை வென்றது போல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இங்கிலாந்து அணி இந்தியாவிடம் இருந்து பாடம் கற்று வருகிறார்கள். இந்தியா தங்களது சொந்த மண்ணில் எவ்வாறு பந்து வீசுகிறது? எவ்வாறு பேட்டிங் செய்கிறது என்பதை எல்லாம் கவனித்து வருகிறார்கள். இந்திய அணியில் உள்ள வீக்னஸ் என்ன என்பது குறித்து அறிந்து இந்தியாவை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது குறித்து எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு வருகிறார்கள்.
அக்சர் பட்டேல் மனதளவில் பலமான வீரர் கிடையாது. அவர் கேட்ச்களை தவறவிடுகிறார். ஆனால் டாம் ஹார்ட்லியை பாருங்கள். தன்னுடைய முதல் பந்திலே சிக்ஸரை கொடுத்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து அவருக்கு ஆதரவளித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சிறந்த வகையில் பந்து வீசினார். இந்த இங்கிலாந்தின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. மீண்டும் அவர்கள் இந்தியாவிடம் இருந்துதான் பாடம் கற்பார்கள் அச்சமின்றி விளையாட இந்தியாவை அவர்கள் நிச்சயமாக வீழ்த்துவார்கள்.
தற்போது ஜடேஜா கே.எல் ராகுல் ஆகியோர் இல்லை. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் தான் ரோகித் சர்மாவின் உண்மையான கேப்டன்சியை நாம் பார்க்க போகிறோம். ஆனால் என்னை பொறுத்தவரை இது ரோகித் சர்மாவுக்கு சுலபமான விஷயம்தான். தங்களுடைய வீரர்களிடம் இனி பயமின்றி விளையாட வேண்டும் என்று அவர் கூறுவார். முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா காட்ட வேண்டும் என்று மாண்டி பனேசர் கூறியுள்ளார்.