ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்தது. இதை அடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்தியாவால் 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தோல்விக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். ஹைதராபாத் ஆடுகளம் இரண்டாவது நாளின் போது, பேட்டிங் செய்ய ஏற்ற நிலையில் இருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மிகப்பெரிய சதத்தை எடுக்காமல் தவறவிட்டார்கள். 70 ரன்கள், 80 ரன்கள் என கூடுதலாக நாம் முதல் இன்னிங்சில் இன்னும் அடித்திருக்க வேண்டும்.
முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் எப்போதுமே கூடுதலாக ரன் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் இரண்டாவது இன்னிங்சில் நாம் குறைவாக ரன்கள் அடித்தாலும் நாம் காப்பாற்றப்படலாம். இங்கிலாந்தின் பேஸ்பால் திட்டத்திற்கு மாற்றாக நாம் ஒரு யுத்தியை கடைப்பிடிக்க வேண்டும். இது போன்ற சிறந்த பவுலர்களுக்கு எதிராக தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதை நான் பார்த்ததில்லை.
இதற்கு முன்பு பேட்ஸ்மேன்கள் முயற்சி செய்து பார்த்து இருக்கிறேன். ஆனால் இவ்வளவு நல்ல இன்னிங்ஸ் விளையாடி இப்போதுதான் நான் பார்க்கிறேன். இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார்கள். எந்த தவறையும் அவர்கள் செய்யவில்லை. ஆலி போப் இன்னிங்ஸ் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். பவுலர்களை பொறுத்தவரையில் இன்னும் நாம் சரியாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன்.
பந்தை எங்கு வீசவேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அந்த விஷயம் குறித்து நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம். எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் இன்னும் நன்றாக பந்து வீசக்கூடியவர்கள் தான். எங்கள் அணி வீரர்கள் முதல்முறையாக சவாலை சந்திப்பவர்கள் கிடையாது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் எப்போதுமே அடுத்த டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுப்பதில் வல்லவர்கள்.
முதல் டெஸ்டில் ஆலி போப் சிறப்பான ஒரு இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். ஒருவர் சிறந்த சாதனையை செய்யும் போது அவருக்கு கை குலுக்கி விட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். எங்களுடைய பவுலர்கள் அடுத்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு பதில் சொல்ல வேண்டும். அடுத்த டெஸ்டில் நாம் எப்படி பந்து வீசப் போகிறோம் எவ்வாறு இங்கிலாந்தின் விக்கெட்டை எடுக்க போகிறோம் என்பது குறித்து திட்டத்தை தீட்ட வேண்டும்.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் எந்த மாதிரி ஷாட்களை ஆடுகிறார்கள் என்பதை பார்த்து விட்டோம். அதற்கு ஏற்ற யுக்தியை நாம் மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வீரர்களை தவறு செய்ய வைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். ஜடேஜா முதல் டெஸ்டின் போது காயம் அடைந்திருக்கிறார். எனினும் அவருடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. இனிமேல் தான் நாங்கள் பார்க்க போகிறோம் என்று டிராவிட் கூறியுள்ளார்.