மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ள நிலையில், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்து அந்த நாட்டின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஃபின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் சிம்ம சொப்பனமாக இருப்பவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவர் இதுவரை இந்திய அணிக்கு எதிராக 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 139 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக ஒரு பந்துவீச்சாளர் எடுத்த அதிக விக்கெட்கள் இதுதான். அந்த அளவுக்கு இந்தியா என்றாலே குறி வைத்து பந்து வீசி வருகிறார் ஆண்டர்சன்.

இந்திய மண்ணில் மட்டும் கொஞ்சம் குறைவாக விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். 13 டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 2012இல் இங்கிலாந்து டெஸ்ட் அணி, இந்திய மண்ணில் வைத்தே இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அந்த அணியில் ஆண்டர்சன் இடம் பெற்று இருந்தார். அப்போது அவர் 4 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
கடைசியாக 2021இல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியிலும் இடம் பெற்று இருந்த ஆண்டர்சன் 3 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் இந்தப் போட்டிகளில் எல்லாம் குறைவாகவே பந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 2024இல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருகிறார் ஆண்டர்சன்.
அவருக்கு தற்போது 41 வயதாகிறது. ஆனாலும், விடாப்பிடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியே தீருவேன் என அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் 10 விக்கெட்கள் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் மட்டுமே இந்த மைல்கல்லை தாண்டி உள்ளனர். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களில் முதல் நபராக ஆண்டர்சன் 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட இருக்கிறார்.
ரோஹித் டீமுக்கு முதல் அடி.. ஃபார்ம் அவுட் வீரரை டீமில் எடுத்த பிசிசிஐ.. இஷான் கிஷனால் வந்த வினை
இந்த நிலையில் அவருடன் ஆடிய அனுபவம் கொண்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஃபின் இந்திய அணிக்கு ஆண்டர்சன் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஜிம்மி (ஜேம்ஸ் ஆண்டர்சன்) சாதாரண மனிதர் அல்ல. ஒரு அசாத்தியமான மனிதர். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். கடந்த வெயில் காலத்தில் (ஆஷஸ் தொடரில்) அவர் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், அவரது குணம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் தன்னால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் தான் ஆடும் முடிவை எடுத்து இருக்கிறார்" என்றார்.