மும்பை : இந்தியாவில் வந்து விளையாடும் வெளிநாட்டு முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அதிகாரிகள் விசா தராமல் இழுத்து அடிப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா வர மத்திய அரசு அனுமதி வழங்குவதில்லை.
அந்த வகையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு தற்போது வெளிநாட்டில் விளையாடி வரும் சில இஸ்லாமிய கிரிக்கெட் வீரர்களுக்கும் மத்திய அரசு விசா வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் மோயின் அலிக்கு மத்திய அரசு விசா தராமல் இழுத்தடித்து வந்தது. இதன் காரணமாக மோயின் அலி, ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மாத காலத்திற்குப் பிறகு மோயின் அலிக்கு விசா கிடைத்தது. இந்த நிலையில் 19 வயதான சோயிப் பஷிர் என்ற இங்கிலாந்து அணி வீரருக்கு தற்போது விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
சுழற்பந்து வீச்சாளரான சோயுப் பஷீரை நம்பி இங்கிலாந்தில் பல திட்டங்களை வகுத்திருந்தது. சோயிப் பஷீர் இங்கிலாந்து அணியுடன் இணைந்து அபுதாபியில் பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விசா கிடைத்து இந்தியா வந்துள்ள நிலையில் பஷீருக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தாங்கள் அனுப்பப் போகும் வீரர்களை டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது. அப்போது முதல் இப்போது வரை அவருக்கு மட்டும் விசா கிடைக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து வீரர் பஷீருக்கு இவ்வாறு விசா கொடுக்காமல் இழுத்து அடித்ததால் அவர் தற்போது இங்கிலாந்துக்கு திரும்பி சென்று விட்டார்.
பஷீருக்கு நடந்த இந்த விஷயம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து வீரர் பஷீருக்கு விசா கிடைக்காமல் போனது வருத்தம் அளிப்பதாகவும், எனினும் தாம் விசா வழங்கும் அதிகாரி கிடையாது. இதனால் ஏன் விசா அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் எனக்கு தெரியாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.