மும்பை : இந்திய அணியில் கே எல் ராகுல், விராட் கோலி தவிர ஒருவர் கூட தென்னாப்பிரிக்க டெஸ்ட்டில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் இந்தியா அதிக வெற்றிகளை பெற வேண்டும்.
இந்த நிலையில், விராட் கோலி, கே எல் ராகுல் தவிர மற்ற இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் விளையாடி அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பயிற்சி செய்யாமல், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் விளையாடி இருக்கிறார்கள் என சரமாரியாக விளாசி இருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியமா? அல்லது ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முக்கியமா? என கேப்டன் ரோஹித் சர்மாவை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ராகுல் ஒரு சதம் அடித்து இருந்தார். விராட் கோலி ஓர் அரைசதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து இருந்தார். அவர்களைத் தவிர ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் என அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் நான்கு இன்னிங்க்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து இருந்தனர்.
இவரெல்லாம் மனுசனே இல்லை.. இந்திய அணிக்கு எதிராக ஆட வரும் 41 வயது இங்கிலாந்து வீரர்.. எச்சரித்த ஃபின்
அவர்கள் மூவரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் தான் சுனில் கவாஸ்கர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடிய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ரஞ்சி தொடரில் பங்கேற்று தன் பேட்டிங்கை கூர்தீட்டி வருகிறார். இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா அல்லது மாற்று வீரராக இருப்பாரா? என்ற சந்தேகம் உள்ளது. அப்படி இருந்தும் அவர் பேட்டிங் பயிற்சிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார்.
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய மூவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பினால் இந்த விவகாரம் பெரிதாக மாறும். அதே சமயம், தங்களுக்கு பழக்கமான இந்திய ஆடுகளங்களில் இவர்கள் மூவரும் எளிதாக ரன் குவிக்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் அவர்களை டி20 தொடரில் ஆட வைத்து இருக்கிறது பிசிசிஐ.