ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்று தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இந்திய அணி இரண்டு வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை காப்பாற்ற தொடர்ந்து தவறி வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடம் என்பது மிகவும் முக்கியமான இடமாகும். கிரிக்கெட் வரலாற்றில் பல ஜாம்பவான் வீரர்கள் மூன்றாவது இடத்தில் தான் விளையாடி இருக்கிறார்கள்.

ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், டான் பிராட்மன் போன்ற பல ஜாம்பவான்கள் மூன்றாவது இடத்தில் தான் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் இந்திய அணியில் புஜாரா மூன்றாவது இடத்தில் விளையாடி வந்தார். ஆனால் இளம் வீரர்களை நோக்கி நாங்கள் செல்கிறோம் என்று இந்திய அணி தங்களுக்கு தாங்களே பெரிய ஆப்பை வைத்துக் கொண்டது.
தொடக்க வீரராக விளையாடி வந்த கில், நான் இனி மூன்றாவது இடத்துக்கு செல்கிறேன் என்று கூறி புஜாராவின் இடத்திற்கு ஆப்பு வைத்தது மட்டுமல்லாமல் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டார். தற்போது கில் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்து இருக்கிறார்.
சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது முன் காலை எடுத்து அதிகமாக விளையாடுகிறார். இதன் காரணமாக அவர் lbw ஆகும் அபாயம் ஏற்படுகிறது. கில்லுக்கு இருக்கும் இந்த மைனஸை சரி செய்யாதவரை அவருக்கு எவ்வளவு வாய்ப்பு கொடுத்தாலும், அவர் ரன் சேர்க்க மாட்டார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து கில் அடித்த ஸ்கோரை தற்போது பார்க்கலாம். 21, 5 ,128 ,13 ,18 ,6 ,10 ,29 ,2 ,26, 23 ,0 ஆகியவைதான்.
இதில் அவர் அடித்த 128 ரன்கள் கில்லுக்கு சாதகமான அகமதாபாத் மைதானம் ஆகும். இவ்வளவு மோசமாக விளையாடி வரும் வீரருக்கு இரண்டாவது டெஸ்டிலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட போகிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதைப் போன்று ஸ்ரேயாஸ் ஐயரும் நடு வரிசையில் தடுமாறி வருகிறார். ரஹானே, லக்ஷ்மன் போன்ற முன்னணி வீரர்கள் ஆடி வந்த இடத்தில் தற்போது ஸ்ரேயாஸ் தடுமாறி வருகிறார்.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்து 13 மாதங்களுக்கு மேல் ஆகிறது. கடைசியாக விளையாடிய 12 இன்னிங்ஸில் அவர் அரைசதம் அடிக்கவே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் இரண்டு மூன்று வீரர்களை தவிர எஞ்சிய அனைவரும் இதே போல் விளையாடினால் எவ்வாறு இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு கடைசியாக இருக்க வேண்டும் என்றும் அதிலும் அவர்கள் சொதப்பிவிட்டால் ரஜத் பட்டிதார் மற்றும் சர்பிராஸ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.