ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி தோல்வியை தழுவி இருக்கிறது இன்னிங்ஸ் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து வீரர் ஆலி போப்பின் அபார ஆட்டத்தால் இந்தியா தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது.
இது ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இந்த தோல்வியை விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விராட் கோலி இல்லை என்றால் இதுதான் அணியின் நிலைமை என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் அசைக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக விளங்கியது. விராட் கோலி ஒரு கேப்டனாக பல நுணுக்கங்களை செய்வார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பந்து வீச்சு முறையை மாற்றும் விதம் பில்டர்களை நிறுத்தும் விதம். பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் கேப்டன் ஆக ஜொலிப்பார்.
மேலும் விராட் கோலி பேட்ஸ்மனாக எவ்வாறு விளையாடுவார் என்று நாம் சொல்லி தெரிய தேவையில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் விராட் கோலி நடு வரிசையில் களமிறங்கி அரணாக நின்று ரன்களை சேர்த்து கொடுப்பார். முதல் இன்னிங்ஸ் இரண்டாவது இன்னிங்ஸ் என எந்த இன்னிங்ஸ் ஆக இருந்தாலும் சரி விராட் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கும் விராட் கோலி இருக்கிறார் என்ற பயம் எதிரணிக்கும் நிச்சயம் இருக்கும்.
ஆனால் விராட் கோலி இல்லாதது தற்போது இந்திய அணியில் மிகப்பெரிய ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் கோலியின் விலகலும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு ஆலோசனை கொடுக்கவும் விராட் கோலி இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.