இதோ தொடங்கப் போகிறது.. இந்தியாவின் இன்னும் ஒரு கிரிக்கெட் வேட்டை!
டப்ளின்: இந்திய, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வந்துள்ளது. அங்கு 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதற்கு முன்னால் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.

யார் ஜெயிப்பார்
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணியை சந்திக்கிறது. இந்த இரண்டு போட்டிகள், இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

கடந்த மார்ச்சுக்குப் பிறகு
கடந்த மார்ச் மாதம் நடந்த நிஹாதாஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணி இப்போதுதான் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.அயர்லாந்து அணி சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் டி20 தொடரில் மோதி வெற்றி பெற்றது.

நடுவரிசையில் யார் யார்
இந்திய அணி தரப்பில் நடுவரிசையில் யாரை களமிறக்குவது என்பது சற்றே கடினமாக உள்ளது.சுரேஷ் ரெய்னா , மணீஷ் பாண்டே , தினேஷ் கார்த்திக் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரில் யாரை இறக்குவார்கள் என்பது போட்டிக்கு முன்னரே தெரியும்.

சிம்ம சொப்பனம் சிமி
அயர்லாந்து அணியை பொறுத்தவரை அந்த அணி ஆல் ரவுண்டர் சிமி சிங் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.20 ஓவர் போட்டிகளில் அவரது சராசரி 150 என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர்களது பேட்டிங் பால் ஸ்டிர்லிங் ,சிமி சிங்,ஆண்டி பால்பிரணி மற்றும் கெவின் ஓ பிரையன் ஆகியோரை நம்பியுள்ளது.

குறைத்து எடை போட முடியாது
பாகிஸ்தானுக்கெதிரான தனது முதலாவது டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதியில் தோல்வியை தழுவிய போதிலும் அவர்களது ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு இந்த போட்டி சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications