ராய்ப்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. டாஸ் வென்ற பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "மைதானத்தில் ஏற்கனவே பனிப்பொழிவு தென்படுகிறது. சமீப காலமாக நாங்கள் சேசிங் செய்யவில்லை. எனவே இந்த ஆடுகளத்தில் இலக்கை துரத்திப் பிடிப்பது சிறந்த பயிற்சியாக இருக்கும் என்று கருதுகிறோம். அணியின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேசுகையில், "நானும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையேத் தேர்வு செய்திருப்பேன். சிறப்பான அணிக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் விளையாடும்போது ஒவ்வொரு போட்டியிலும் புதிதாகக் கற்றுக்கொள்ள முடிகிறது" என்று கூறினார்.
இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் விரலில் காயம் அடைந்த அக்ஷர் படேலுக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணா வாய்ப்பு பெற்றுள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியிலும் டிம் சீஃபர்ட், மேட் ஹென்றி மற்றும் பவுல்க்ஸ் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
டெவோன் கான்வே, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஜக்கரி பவுல்க்ஸ், மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.
ராய்ப்பூர் மைதானம் பரப்பளவில் மிகவும் பெரியது. பக்கவாட்டில் 68 மீட்டர் தூரமும், நேர் திசையில் 75 மீட்டர் தூரமும் எல்லைக்கோடுகள் அமைந்துள்ளன. ஆடுகளத்தில் ஆங்காங்கே காய்ந்த புற்கள் மற்றும் வெடிப்புகள் தென்பட்டாலும், மேற்பரப்பில் ஒருவித பளபளப்பு காணப்படுகிறது. இதனால் பந்து சறுக்கிக் கொண்டு பேட்டிற்கு நன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று ரீதியாக இங்கு டி20 போட்டிகளில் குறைவான ரன்களே அடிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் இங்கு நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் லீக் போட்டியில் 720 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சு: மைதானத்தின் எல்லைக்கோடுகள் பெரிதாக இருப்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஆடுகளத்தின் வெடிப்புகளைப் பயன்படுத்தி பந்து சுழன்றால் பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும்.
பனிப்பொழிவு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த போட்டிகளில் பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவது பேட்டிங் செய்வதே (சேசிங்) வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தீப் தாஸ்குப்தா மற்றும் சைமன் டூல் கணித்துள்ளனர்.