அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளதைத் தொடர்ந்து, போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியை நேரில் காண்பதற்காக ரசிகர்கள் அகமதாபாத் நோக்கிப் படையெடுத்து வருவதால், அங்குள்ள ஹோட்டல் அறைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றவுடனேயே, அகமதாபாத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்தது. இதன் காரணமாக அறை வாடகைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன.

நகரில் உள்ள சாதாரண பட்ஜெட் ஹோட்டல்களில் கூட ஒரு இரவு தங்குவதற்கு 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், உயர்தர வசதிகள் கொண்ட சொகுசு விடுதிகளில் ஒரு இரவுக்கான வாடகை 56,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளதால், வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல் அறைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் தலைவர் நரேந்திர சோமானி கூறுகையில், "தற்போது அறைகளின் வாடகை 80,000 ரூபாய் வரை உள்ளது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தங்குவதற்கு இடம் தேடி வருவதால், தேவை அதிகரித்து வருகிறது. எனவே, போட்டி நாளன்று ஒரு இரவுக்கான வாடகை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக மார்ச் மாதத்தில் ஹோட்டல் தொழில் சற்று மந்தமாகவே இருக்கும். ஆனால், உலகக் கோப்பை இறுதிப்போட்டி காரணமாக இந்த மாதம் ஹோட்டல் உரிமையாளர்களுக்குச் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது.

இறுதிப்போட்டி மீதான ஆர்வம் காரணமாக, அகமதாபாத் நகரில் உள்ள 80 சதவீத ஹோட்டல் அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள சில அறைகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, பல ஹோட்டல் நிர்வாகங்கள் முன்பதிவை ரத்து செய்யும் வசதியை நீக்கியுள்ளன. அதாவது, புக் செய்த பிறகு வரவில்லை என்றாலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

இந்தத் திடீர் மவுசு குறித்து குஜராத் வர்த்தக சபையின் சுற்றுலாப் பிரிவைச் சேர்ந்த சஞ்சீவ் சஜர் கூறுகையில், "இந்த இறுதிப்போட்டியால் ஹோட்டல்கள் மட்டுமல்லாமல் உணவகங்கள், போக்குவரத்து மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை என அனைத்துத் துறைகளிலும் வணிகம் சிறப்பாக இருக்கும்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா அல்லது நியூசிலாந்து முதல் முறையாகச் சாம்பியன் ஆகுமா என்பதை நேரில் காண ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுத்தும் டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யத் தயாராக உள்ளனர்.