துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சின் போது, வருண் சக்கரவர்த்தி முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா வருண் சக்கரவர்த்தி அருகே வந்து செய்த செயலைப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வந்தது. ஐந்து விக்கெட்களை இழந்த நிலையில், கிளென் பிலிப்ஸ் நின்று நிதானமாக ரன் சேர்த்து வந்தார். அவர் அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும் நிதானமாக ஆடினார்.

ஏனெனில், கடைசி ஐந்து ஓவர்களில் ரன் விகிதத்தை உயர்த்தலாம் என்ற திட்டத்தை அவர் மனதில் வைத்திருந்தார். அவரை நாற்பதாவது ஓவருக்குள் வீழ்த்த வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது இந்திய அணி. அப்போது அவர் 30 ரன்களை தாண்டி ரன் சேர்த்திருந்தார் பிலிப்ஸ்.
அப்போது 38-வது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பிலிப்ஸ் பவுல்ட் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அதைப் பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். நேராக வருண் சக்கரவர்த்தி அருகே வந்து அவரைக் கட்டியணைத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்பு எதிர்பார்த்தது போலவே அந்த அணியின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. கடைசி ஆறு ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா வீசிய ஓவர்களில் மட்டுமே நியூசிலாந்து அணி அதிக ரன் சேர்த்தது.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. ஒருவேளை கிளென் பிலிப்ஸ் களத்தில் இருந்திருந்தால், மைக்கேல் பிரேஸ்வெல்லுடன் இணைந்து அதிக ரன் சேர்த்திருப்பார். நிச்சயமாக நியூசிலாந்து அணி 20 அல்லது 30 ரன்கள் கூடுதலாகவே எடுத்து இருக்கும்.
துபாய் மைதானத்தில் 280 ரன்களை சேசிங் செய்வது என்பது மிக சவாலானதாக இருந்திருக்கும். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.