துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் ஏமாற்றம் அளித்தார். வழக்கம் போல அதிரடியாக ஆடுவதாக நினைத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா. அவர் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்னதாகவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டாலும், நியூசிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக வெற்றி பெறுவது, அடுத்து அரையிறுதியில் சிறப்பாக விளையாடுவதற்கு உத்வேகமாக அமையும். எனவே, இந்திய அணி இந்த போட்டியில் எப்படி விளையாட போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது. சுப்மன் கில் எதிர்பாராத வகையில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து ஆடினர். இருவரும் மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை ஆடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். ஒரு சிக்ஸ் அல்லது இரண்டு சிக்ஸ் அடித்தால் தனது வேலை முடிந்தது என்பது போலத்தான் ரோஹித் சர்மாவின் ஆட்டம் சமீப காலமாக உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா ஏமாற்றம் அளித்த பின்பு விராட் கோலியும் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 30 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்களை இழந்திருந்தது. அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் தான் ஆட்டம் ஆடி அணியை மீட்டனர். அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.