வதோதரா: 2026-ம் ஆண்டின் கிரிக்கெட் பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கக் காத்திருக்கிறது. அதைவிடப் பெரிய செய்தி என்னவென்றால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவதால், டிக்கெட் விற்பனையில் அனல் பறந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) வதோதராவில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய வெறும் 8 நிமிடங்களில், மைதானத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், ரோஹித் - கோலி வரவு காரணமாக இந்த ஒருநாள் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 7-ம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ளதால், பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்த ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரோஹித் மற்றும் விராட் டி20-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் ஒருநாள் போட்டிகளில் முழு வீச்சில் விளையாட உள்ளனர்.
38 வயதை நெருங்கும் ரோஹித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி இலக்காக 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அதற்கான முதற்கட்டத் தயாரிப்பாகவே இந்த நியூசிலாந்து தொடர் பார்க்கப்படுகிறது. தங்களின் விருப்பமான நட்சத்திரங்களைக் காண வதோதரா மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து நியூசிலாந்து ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற உள்ள ராஜ்கோட் மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற உள்ள இந்தூரிலும் டிக்கெட்டுகள் உடனே விற்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவகையில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் தாக்கம் குறித்து பெருமிதப்பட்டாலும், அவர்கள் இருவருக்கு பின் ரசிகர்களை ஈர்க்கும் வீரர்கள் என யாரும் இந்திய அணியில் இல்லாதது பின்னடைவாகவும் உள்ளது.