திணறும் இந்தியா
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
வானிலை மையம்
இந்நிலையில், நான்காம் நாளான நேற்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி, நேற்று மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நான்காம் நாள் ஆட்டம்
இந்நிலையில், மீண்டும் போட்டியை தொடங்கும் வாய்ப்பில்லாத காரணத்தால், நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட, மொத்தமாகவே இதுவரை ஒண்ணேமுக்கால் நாள் ஆட்டத்தை மட்டுமே இரு அணிகளும் விளையாடியுள்ளன
இந்த நிலையில் தான் இன்று ஐந்தாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டப்படி நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது. எனினும், சவுத்தாம்ப்டனில் காலை முதல் மழை இல்லை. மேகங்கள் அவ்வப்போது சூழ்ந்தாலும், மழை இதுவரை பெய்யவில்லை. இதனால், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிசிசிஐ மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை சற்றுமுன் வெளியிட்ட டீவீட்டும் அதனை உறுதிப்படுத்தியது. அந்த டீவீட்டில், போட்டி திட்டமிட்டப்படி தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் டே காப்பாத்தணும்
ஆனால், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, சவுத்தாம்ப்டனில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதனால், காலை முழுவதும் மிகத் தீவிரமாக வேலை செய்து மைதானத்தை சுத்தப்படுத்தி, போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மைதான ஊழியர்கள் செய்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியிருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதேசமயம், நாளை (ஜூன் 23) மாற்று நாள் (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.