தோல்விக்கு காரணம் என்ன?
இந்தியா முதல் டி20 போட்டியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று ஆல்-ரவுண்டர்களை கொண்டு ஆடியது. இதுவரை இந்தியா இப்படி ஒரு அணியை தேர்வு செய்ததில்லை. இந்த புதிய முயற்சி வேலை செய்யவில்லை. அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
புதிய முயற்சிகளை எடுக்கும் அணி
கவாஸ்கர் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசுகையில் இந்தியா உலகக்கோப்பை அணிக்கு வீரர்களை தயார் செய்யும் வகையில் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. நியூசிலாந்து டி20 தொடரை அதற்கு இந்தியா பயன்படுத்திக் கொண்டுள்ளது என்றார்.
பரிசோதனை செய்யும் இந்தியா
மேலும், இந்திய அணியில் வீரர்களை பரீட்சித்துப் பார்க்க டி20 போட்டிகளை பயன்படுத்திக் கொள்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் விஜய் ஷங்கர் பேட்டிங்கில் முன்னே களம் இறங்கினார். அணி பரிசோதனை செய்து பார்க்கிறது என்றால் போட்டியின் முடிவை பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை என்றார் கவாஸ்கர்.
ஆல்-ரவுண்டர்கள் முயற்சி
முதல் டி20 போட்டியில் கவாஸ்கர் கூறியது போல பல பரிசோதனை முயற்சிகளை இந்தியா செய்தது. முழு நேர பந்துவீச்சாளர்கள் மூவர் மட்டுமே இந்த போட்டியில் இடம் பெற்றனர். ஆல்-ரவுண்டராக ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா மற்றும் விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றனர். ஆனால், இந்த முயற்சி பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் தோல்வி அடைந்தது.
பேட்டிங்கில் விஜய் ஷங்கர்
இவர்களில் விஜய் ஷங்கருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தியது இந்தியா. அதிலும் அவரை பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் களமிறக்கிப் பார்த்தார் ரோஹித் சர்மா. அதற்கேற்ப விஜய் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.
மூன்று விக்கெட் கீப்பர்கள்
இந்திய அணியில் எப்போதும் இல்லாத வகையில் மூன்று விக்கெட் கீப்பர்கள் ஒரே நேரத்தில் அணியில் இடம் பெற்றனர். அவர்களில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரும் பேட்டிங் மட்டுமே செய்தனர். ஆனால், இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அணியை கைவிட்டனர். தினேஷ் கார்த்திக் நல்ல விக்கெட் கீப்பர் என்றாலும் பீல்டிங்கில் இரண்டு எளிதான கேட்ச்களை கோட்டை விட்டார்.
தோல்வியை பெரிதாக்க வேண்டாம்
ஆக மொத்தத்தில் இந்தியா முதல் டி20 போட்டியில் பரிசோதித்து பார்த்த பல முயற்சிகளில், விஜய் ஷங்கர் மட்டுமே தேறியுள்ளார். இந்த பரிசோதனை முயற்சிகளை வரவேற்று, அணியின் தோல்வியை பெரிதாக நினைக்க வேண்டாம் என கூறுகிறார் கவாஸ்கர்.