
2வது டெஸ்ட் போட்டி
இப்போட்டிகாக இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். சீனியர் வீரர்கள் இஷாந்த் ஷர்மா, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக மூவரும் விலகியிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மாற்று வீரர்களாக முகமத் சிராஜ், ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டனர். இதில் ரகானே மற்றும் இஷாந்த் சர்மாவின் ஃபார்ம் மோசமாக இருந்த போதும், ஜடேஜாவின் விலகல் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி
குறிப்பாக ஆல் ரவுண்டர் ஜடேஜவிற்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஜெயந்த் யாதவை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். வான்கடேவில் தற்போதுள்ள ஈரப்பதத்தால் நிச்சயம் ஒரு நல்ல பேட்ஸ்மேன் லோயர் ஆர்டரில் தேவை. ஆனால் ஜெயந்த் யாதவிடம் என்ன ஸ்பெஷல் உள்ளது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

அப்படி என்ன சிறப்பு
31 வயதான ஜெயந்த் யாதவ் வலதுகை ஆஃப் ஸ்பின்னர் ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2016 ஆண்டு முதல் 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஆனால் அந்த 4 போட்டிகளிலேயே 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.

பேட்டிங் ஃபார்ம்
2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பியது. அப்போது விராட் கோலி மட்டும் தனியாளாக 200 ரன்கள் அடிக்க, அவருக்கு முக்கிய பார்ட்னராக இருந்த ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் குவித்தார். அறிமுக ஆட்டங்களில் சதம் மற்றும் அரைசதமா என அனைவரும் அசந்தனர். அந்த சதத்தை அவர் அடித்தது தற்போது நியூசிலாந்து டெஸ்ட் நடைபெற்று வரும் இதே வான்கடே மைதானத்தில் தான்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
எனவே சுழற்பந்து வீச்சாளரான அவருக்கு வான்கடே மைதானம் ஒரு நல்ல பேட்டிங் களமாக உள்ளது. இதன் காரணமாகவே தற்போது ஜடேஜாவிற்கு பதிலாக அவர் அணியில் விளையாடுகிறார். 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து தற்போது அவர் டெஸ்ட் அணியில் இணைந்திருப்பதால் அவரின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.


Click it and Unblock the Notifications