இந்தியா , பாகிஸ்தான் ஒரு நாள் ஆட்டம் என்றால் சும்மாவா. அது வேற லெவல் அல்லவா. அப்படி பட்ட ஒன்றில் இந்த இறுதி ஆட்டம் ஒன்று.இந்த பகல் - இரவு இறுதி ஆட்டத்தின் பாகிஸ்தான் கேப்டன் டாஸ் செய்து முதலில் பேட்டிங் விளையாட முடிவு செய்தார்.
இந்த ஆட்டம் ஆஸ்திரேலிய மண்ணில் மெல்போர்ன் மைதானத்தில் நடைப் பெற்றது. (10.03.1985)
எதிர் பார்த்த லெவலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஆடவில்லை. கபில் தேவ், சேத்தன் ஷர்மா இருவரும் சிறப்பாக பந்துகள் வீசினார்கள். 40 ரன்களுக்குள் முதல் 4 விக்கெடுக்களை இழந்தது பாகிஸ்தான் அணி. ஸ்கோர் 33 - 4. கபில் தேவ் 3 மற்றும் ஷர்மா 1 விக்கெட் எடுத்து பாகிஸ்தான் வீரர்களை திணறடித்தனர். கேப்டன் ஜவேத் மியந்தாத் பொறுப்புடன் நின்று சூழ்நிலை உணர்ந்து ஆடிக்கொண்டு இருந்தார்.

கேப்டன் சுனில் கவாஸ்கர் பவுலர்களை மாற்றி மாற்றி எதிர் அணியினருக்கு அழுத்தம் கொடுத்தார். 10 ஓவர்கள் வீசிய ரவி சாஸ்திரி 44 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆனால் கவாஸ்கர் முழு நம்பிக்கை வைத்து இருந்த லெக் ஸ்பின் பவுலர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் அந்த நம்பிக்கை சரி என்று உறுதி செய்தார்.
வீசிய 9 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்தார். 3 விக்கெட்டுக்கள் எடுத்தார். அவற்றில் மேட்ச்சின் போக்கையே மாற்ற வல்ல இரண்டு வீரர்களின் விக்கெட்டுக்கள் அடங்கும்.
அவை கேப்டன் ஜவேத் மியந்தாத் (48) சலீம் மாலிக் (14) ஆகியோர் ஆகும். இம்ரான் கான் (35) வாசிம் ராஜா ( 21* ) இருந்தும் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 200 ரன்களுக்குள் அமைந்தது. ஆம். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர்
175 / 9, 50 ஓவர்கள் முடிவில்.
இந்திய அணி பேட்டிங்கை துவங்கியதும் ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஜோடி தங்கள் அட்டகாச ஆட்டங்களை வெளிப் படுத்தினர். குறிப்பாக ஸ்ரீகாந்த் புயல் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து வெளுத்து வாங்கினார். அவர் இம்ரான் கான் பந்தில் அவுட் ஆகும் பொழுது இந்திய அணியின் ஸ்கோர்
103 - 1.
77 பந்துக்கள் எதிர் கொண்ட ஸ்ரீகாந்த் அடித்த ரன்கள் 67.
6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள். இந்த ஆட்டம் முழுவதிலும் சிக்ஸர்கள் அடித்தது
ஸ்ரீகாந்த் மட்டுமே. ரவி சாஸ்திரி 148 பந்துகள் விளையாடி எடுத்த ரன்கள் 63.
ஸ்ரீகாந்த் , ரவி சாஸ்திரி ஒப்பனிங் ஜோடி வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.இந்திய அணி விளையாடியது 47.1, ஓவர்கள்.
ஸ்கோர் 177 / 2.
பென்சன் அண்ட்
ஹெட்ஜஸ் கோப்பையை வென்றனர்.
இந்திய விக்கெட் கீப்பர் சாதனந்த விஸ்வநாத் அருமையாக விக்கெட் கீப்பிங் செய்தார். இவர் பிடித்தது 2 கேட்சுக்கள். செய்தது 1 ஸ்டம்பிங்.
ஆட்டநாயகர் விருது கிருஷ்ணமச்சாரி
ஸ்ரீகாந்திற்கு வழங்கப் பட்டது. தொடர் ஆட்ட நாயகன் விருது வென்றவர் ரவி சாஸ்திரி.
இந்த் மைதானத்தில் தான் இவர் பரிசாக வென்ற ஆடிக் காரில் இந்திய வீரர்கள் அமர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாசுதேவன், பெங்களூரு