துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா சாவா என அமைந்துள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இதனால், அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும். 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இரு அணிகளும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மோதுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றைப் பொறுத்தவரை பாகிஸ்தான் கையே ஓங்கி இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் ஐந்து முறை சாம்பியன் டிராபி தொடரில் மோதி இருக்கிறார்கள். இதில் பாகிஸ்தான் அணி மூன்று முறையும், இந்திய அணி இரண்டு முறையும் வென்றிருக்கிறது. ஆனால் கடைசியாக நடைபெற்ற ஆறு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றும், ஒரு போட்டி மழையாலும் ரத்தாகி இருக்கிறது.
ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இன்று வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் பேட்டர்ஸ் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பாபர் அசாம், சல்மான் ஆகா, முஹமது ரிஸ்வான் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்.
இதேபோன்று பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷாகின் ஆப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா போன்ற வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்தியாவின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த போட்டி ஒருதலைப் பட்சமாக இந்தியாவுக்கு சாதகமாகவே முடியும். பாகிஸ்தான் வீரர் பகார் சமான் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் இமாம் உல் ஹக் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய நேரப்படி இரண்டு முப்பது மணிக்கு தொடங்கும். டாஸ் இரண்டு மணிக்கு வீசப்படும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஓடிடியில் ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக மொபைலில் மட்டும் பார்க்கலாம்.