அகமதாபாத் : இந்திய அணிக்கு எதிராக ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை நினைத்து அச்சத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடும் அழுத்தத்தில் இருப்பதாக பாகிஸ்தானில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதற்கு பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் கேப்டனும் ஆன இன்சமாம் உல் ஹக் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. பொதுவாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தால் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
ஆனால், இப்போது அதை விட இன்சமாம் உல் ஹக் என்ன செய்வாரோ என்ற அச்சமே பாகிஸ்தான் வீரர்களிடம் அதிகமாகி உள்ளது.

அவர் 2023 உலகக்கோப்பை தொடரில் அணியின் அனைத்து முடிவுகளிலும் தலையிடத் தொடங்கி இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழுவையே தள்ளி வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் இன்சமாம் உல் ஹக் என்ன செய்வாரோ? என்ற அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் செல்வாக்கு கொண்ட இன்சமாம் உல் ஹக் தேர்வுக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
அவர் நினைத்தால் ஒரு வீரருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பே கிடைக்காமல் செய்து விட முடியும் என்பதே அவர்கள் பயத்தின் மூல காரணம். அதே போல, உலகக்கோப்பை போட்டிகளில் எந்த வீரர் போட்டியில் களமிறங்க வேண்டும் என்ற முடிவையும் அவரே எடுத்து வருவதாக முன்பே ஒரு தகவல் வெளியானது.
பொதுவாக தேர்வுக் குழு தலைவர் என்பவர் போட்டியில் எந்த 11 வீரர்கள் களமிறங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க மாட்டார்கள். அது முற்றிலும் அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரின் முடிவு தான்.
ஆனால், 2023 உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வந்த பாகிஸ்தான் அணியுடன், தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக்கும் வந்திருக்கிறார். அவர் முன்னாள் கேப்டன் என்ற முறையில் ஆலோசனைகள் வழங்கவே வந்திருக்கிறார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அணியின் முடிவுகளையும் அவரே எடுக்கத் துவங்கி இருக்கிறார்.
இதனால் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் குழு ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், இன்சமாம் உல் ஹக் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணியில் யார், யார் இடம் பெற வேண்டும், என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற திட்டங்களை வகுத்து கொடுக்க வாய்ப்பு உள்ளது.
ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை ஏழு முறை மோதி இருக்கின்றன. அந்த ஏழு முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி தொடர்களான சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 உலகக்கோப்பை ஆகியவற்றிலும் முதலில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.
ஆனால், பின்னர் சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வெற்றிகளை பெற்று விட்டது. எனினும், ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் மட்டும் பாகிஸ்தான் அணியால் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. அதை சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார் இன்சமாம் உல் ஹக். அவர் இந்தியா - பாகிஸ்தான் ஆடிய ஏழு உலகக்கோப்பை போட்டிகளில் நான்கில் ஆடி தோல்வியை சந்தித்தவர்.
அந்த வலியின் காரணமாக அவர் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பல வீரர்களுக்கு இந்த உலகக்கோப்பை தொடரோடு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு முடிந்து விடும் அபாயம் உள்ளது.