துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்த செய்கை, கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியைச் சீண்டும் வகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் செய்த செய்கையை அப்படியே திருப்பிச் செய்து, பும்ரா பதிலடி கொடுத்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து மிகவும் நம்பிக்கையுடன் ஆடியது. ஆனால், அதன் பிறகு அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. கடைசி 9 விக்கெட்டுகளுக்கு பாகிஸ்தான் அணி வெறும் 33 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பும்ரா, முகமது நவாஸ் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதில் ஹாரிஸ் ரவுஃபின் விக்கெட்டை போல்ட் அவுட் முறையில் வீழ்த்திய பும்ரா, அதன் பிறகு விமானம் மேலிருந்து கீழே விழுந்து நொறுங்குவதைப் போல சைகை செய்து ஹாரிஸ் ரவுஃபைக் கிண்டல் செய்தார். இதற்கு முந்தைய சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் ஹாரிஸ் ரவுஃப் இந்திய ரசிகர்களைப் பார்த்து, ஆறு இந்திய விமானங்களைச் சாய்த்தது போன்ற ஒரு சைகையைச் செய்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது அந்த திமிர்பிடித்த செயலுக்கு அவருக்கு போட்டிச் சம்பளத்தில் முப்பது சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா அதே சைகையைச் செய்து காட்டியது இந்திய ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அபாரமாகப் பந்து வீசிய குல்தீப் யாதவ், 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக் கொடுத்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்தியச் சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை முழுமையாகச் சரிந்தது. பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. முதன்முறையாக பாகிஸ்தான் அணியை ஆசிய கோப்பை இறுதியில் சந்தித்து அதில் வெற்றியும் பெற்றது இந்திய அணி.