கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய 50 ஓவர் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை இரவு தான் முடிந்தது.
இந்தப் போட்டி நடந்து முடியும் என யாருமே எதிர்பார்க்காத நிலையில் மைதான ஊழியர்களின் கடின உழைப்பால் அது சாத்தியமாயிற்று. உலக கோப்பை தொடர்க்கு முன்பு பாகிஸ்தான் போன்ற அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கும்.

இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்று தான் நாங்கள் யோசித்தோம். ஏனெனில் எங்களுடைய சில வீரர்களுக்கு மேட்ச் பிராக்டிஸ் தேவைப்பட்டது. இந்தப் போட்டி நடந்து முடிந்ததற்கு முக்கிய காரணம் மைதான ஊழியர்கள் தான். ஒவ்வொரு முறையும் தார்ப்பாயை மூடி திறப்பது என்பது எவ்வளவு கடினமான பணி என்று எனக்கு தெரியும்.
எங்களுடைய அணி சார்பாக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணியின் செயல்பாடு குறித்து பேச வேண்டும் என்றால் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பேட்டிங்கை தொடங்கும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்பதை உணர்ந்தோம். மேலும் மழை பெய்யும் போதெல்லாம் அதற்கு தகுந்தார் போல் எங்களுடைய இன்னிங்சை நாங்கள் மாற்றிக்கொண்டோம். குறிப்பாக கோலி, ராகுல் ஆகியோர் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள்.
முதலில் அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் அதிரடியை காட்டுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். பும்ரா நன்றாகத்தான் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்கிறார். 8 முதல் 10 மாதம் வரை அவர் கடின உழைப்பை மேற்கொண்டார். பும்ராக்கு தற்போது 27 வயது தான் ஆகிறது.
இந்த நிலையில் அவர் பல போட்டிகளை காயத்தால் தவறவிடுவது என்பது சரி கிடையாது. இன்று அவர் பந்து வீசிய விதம் அவர் யார் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் போட்டியில் எங்களுக்கு பல பாசிட்டீவான விஷயங்கள் நடந்திருக்கிறது. தொடக்க வீரர்கள் விராட் கோலி கேஎல் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலியை பொருத்தவரை அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்த விதம் பிரமிக்க வைக்கிறது.
மேலும் கே.எல். ராகுல் காயத்திலிருந்து திரும்பி ரன்களை சேர்த்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் வீசுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் ராகுல் விளையாடுவதை அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் விளையாடியதைப் பார்த்தாலே அவர்களுடைய மனநிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்கு புரிந்து இருக்கும் என்று ரோகித் சர்மா கூறினார்.