கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 37 பந்துகளில் எல்லாம் அரை சதம் எடுத்து அசத்தினார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான், அதேபோல் ஒரு ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்தலாம் என நினைத்தது.

ஆனால் அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். துண்டு ஒரு முறை தான் தவறும் என்று சூப்பர் ஸ்டார் சொல்வது போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள். ரோகித் சர்மா முதலில் பொறுமையாக விளையாட மறுமுனையில், இருந்த கில் அதிரடியை காட்டினார்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியை பார்த்து அனைவரும் பயந்த நிலையில் கில் இறங்கி வந்து அப்ரிடி தலைக்கு மேலே தூக்கி பவுண்டரி அடித்தார். மேலும் நீ எப்படி போட்டாலும் நான் அதை அடிப்பேன் என்ற பாணியில் சுப்மன் கில், அழகாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் ரன் குவிப்பை தடுக்க தடுமாறினர். இன்னும் சொல்லப்போனால் சுப்மன் கில்லை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
37 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில், அரைசதம் எடுத்து அசத்தினார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ரோகித் சர்மாவும் அதிரடியை காட்ட தொடங்கினார். அவர் 42 பந்துகளில் அரை சதம் எடுக்க இந்திய அணி 13.2 ஓவர்களில் எல்லாம் 100 ரன்கள் கடந்தது.
சதாப்கான் ஓவரில் பகீம் அஷ்ரபின் அபார கேட்ச்சால் ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழக்க, ஷகின் ஆப்ரிடி திடீரென்று லெக் கட்டர் பந்தை வீசி கில் விக்கெட்டை ஆட்டம் இழக்க வைத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது.
இதனை தற்போது 300 ரன்களுக்கு மேல் கொண்டு செல்வது நடுவரிசை வீரர்களின் கையில் தான் இருக்கிறது.