நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்னும் சில மணி நேரத்தில் நியூயார்க் நகரில் தொடங்க இருக்கின்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் தான் மிகவும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்றும் பேட்ஸ்மேன்கள் தடுமாறும் விதமாக அபாயகரமாக ஆடுகளம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் குறைந்த ஸ்கோரே அடிக்கப்பட்டிருப்பதும் மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் நிலையில் இதனை மாற்ற முயற்சி செய்து வருவதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ஆடுகளத்தில் இருக்கும் புற்களை நீக்கிவிட்டதாகவும், இதனால் பேட்டிற்கும்,பந்திற்கும் சரிசமமான வகையில் ஆட்டம் இருக்கும் என்று நம்புவதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். நியூயார்க் மைதானத்தில் அனைத்து ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் டாஸ் வென்றால் இந்திய அணி முதலில் பந்து வீசுவதே சால சிறந்தது.
ஏனென்றால் இலங்கை அணி மற்றும் அயர்லாந்து அணி ஆகியோர் முதலில் பேட்டிங் செய்து 100 ரன்களை கூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவினர்.
இதைப் போன்று நேற்று நடைபெற்ற நெதர்லாந்து ஆட்டத்திலும் அந்த அணி 103 மட்டுமே முதலில் பேட்டிங் செய்து எடுத்தது.முதலில் பந்து வீசிய அணிகள் தான் இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றது.இதனால் அதே பார்முலாவை இந்தியா பயன்படுத்த வேண்டும்.பாகிஸ்தானை குறைந்த இலக்கில் சுருட்டி அதன் பிறகு இந்திய அணி சேஸ் செய்ய வேண்டும். ஒரு வேளை இந்தியா டாசை இழந்தால், அது மிகப்பெரிய பின்னடைவாக மாறும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி குறைந்தபட்சம் 140 முதல் 160 ரன்கள் வரை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் 40 ஓவர் வரையிலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு தான் சாதகமாக இருக்கிறது. இதனால் இந்திய அணி வெற்றிக்காக போராட வேண்டும். ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க டெஸ்ட் இன்னிங்ஸ் போல் ஆட வேண்டும்.