ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீனியர் வீரர்கள் பலரும் இந்த தொடரில் இருந்து விலகினர். இதனால் இந்த தொடரில் இந்தியா சரியான அடி வாங்கிவிட்டு வரப்போகிறது என்று பல கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஏனென்றால் தென்னாப்பிரிக்க ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் வீழ்த்த முடியும்.

ஆனால் பும்ரா, சமி போன்ற வீரர்கள் இல்லாமலேயே டி20 தொடரில் ஆர்ஸ்தீப் சிங், சிராஜ் ,முகேஷ் குமாரை வைத்து ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது. இந்த நிலையில் டி20 போட்டியில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தியா ஒரு சிறிய மாற்றத்தை இன்றைய ஆட்டத்தில் செய்தது. டி 20யிலாவது ஏதேனும் வீரர்கள் அடித்து ஆடி விக்கெட் இழந்து விடுவார்கள்.
ஆனால் ஒரு நாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான் போன்ற வீரர்களை வைத்து போட்டியில் வெல்வதெல்லாம் மிகவும் கடினம் என்று பலரும் நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தென்னாப்பிரிக்காவை 116 ரன்களில் இந்திய அணி சுருட்டியது இதற்கு காரணம் ஒரே ஒரு யுக்தி தான். அதாவது தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆடி ரன்களை சேர்க்கிறார்கள்.
இதனை கவனித்த டிராவிட் பயிற்சி குழு, ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுமே முழுக்க முழுக்க ஸ்டம்பை குறி வைத்து பந்து வீச அறிவுறித்தினார்கள். அதன் படி, ஆட்டத்தின் முதல் பந்தே, ஸ்டெம்பை குறி வைத்து யாக்கர் பந்தாக வந்தது. இதனை கொஞ்சமும் தென்னாப்பிரிக்க வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆடுகளத்தில் பட்டு பந்து நன்றாக நகர்ந்தது.
இதனை பயன்படுத்திக் கொண்டு ஸ்டெம்பை குறி வைத்து இந்திய வீரர்கள் வீசியதால் பெரும்பாலான தென்னாப்பிரிக்க வீரர்கள் lbw மற்றும் போல்ட் ஆகிய முறையில் ஆட்டம் இழந்தனர். இந்த ஒரே ஒரு யுக்தி மாற்றத்தை வைத்து இளம் வீரர்களைக் கொண்டு டிராவிட் அணி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறது.