
முதல் இன்னிங்ஸ்
ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பான முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதன் பின்னர் வந்த புஜாரா டக் அவுட், விராட் கோலி 35 ரன்களுக்கு வெளியேறினாலும் மறுமுணையில் நின்றிருந்த கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்டில் அவர் அடிக்கும் 7வது சதம் இதுவாகும்.

வலுவான நிலையில் இந்தியா
ராகுலுக்கு உறுதுணையாக நின்று விளையாடிய அஜிங்கியா ரகானே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. 122 ரன்களுடனும் ரகானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் கையில் 7 விக்கெட்கள் மீதம் இருந்ததால் அதிக ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஆட்டம்
இந்நிலையில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு வானிலை ஆப்பு வைத்துள்ளது. போட்டி நடைபெற்று வரும் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கியது. சிறிது நேரம் கழித்தாவது மேகக்கூட்டங்கள் விலகிவிடாதா என வீரர்கள் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால் முன்கூட்டியே உணவு இடைவெளி கொடுக்கப்பட்டது.

கடைசி வரை ஏமாற்றமே
ஆனால் கடைசி வரை காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இடையில் மழைவிட்ட போதும், மோசமான வெளிச்சம் இருந்து வந்தது. எப்படியும் ஆரம்பித்துவிடலாம் என மைதான ஊழியர்கள் மூடப்பட்டிருந்த பிட்ச்-ஐ திறந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் மழை வந்ததால் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications