கெபேர்கா: இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கெபெர்கா மைதானத்தில் நடைபெறுகிறது. ஊர் உலகமே ஐபிஎல் மினி ஏலம் குறித்து பேசி வருகிறது.
இதனால் ரசிகர்களின் கவனம் முழுவதும் அங்குதான் சென்று இருக்கிறது. ஆனால் இன்று இந்திய அணி தங்களுடைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. கெபெர்கா மைதானம் மிகவும் தோய்வாக இருக்கும். இங்கு சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 8 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது.
இந்த எட்டு ஒரு நாள் போட்டியுமே எந்த ஒரு அணியும் 300 ரன்கள் தொட்டதில்லை. இதனால் இரண்டு அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். தொடரை வெல்வதற்கு இது இந்தியாவுக்கு நல்ல ஒரு வாய்ப்பாகும். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஏதேனும் ஒரு வீரர் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.
இதற்கு காரணம் ஸ்ரேயாஸ், டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரஜத் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் ஆகிய இரண்டு பேரில் ஏதேனும் ஒருவருக்கு இன்று அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது. சஞ்சு சாம்சன் நடுவரிசையில் களமிறங்குகிறார்.
சாம்சனுக்கு நம்பர் மூன்று அல்லது நான்காவது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடு வரிசையில் இந்திய அணி ரிங்கு சிங்கை பயன்படுத்தலாம். ஒருவேளை சஞ்சு சாம்சன் நடு வரிசையில் தான் விளையாட போகிறார் என்றால் இந்திய அணி ரஜட் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கலாம். மற்றபடி பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது. தொடரை வெல்ல இந்தியாவுக்கு ஏற்ற மைதானம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.