பார்ல் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கடைசி போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவார்கள்.
ஏனென்றால் இரு அணிகளுமே தலா ஒரு போட்டியை வென்று தற்போது சமநிலையில் இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஐபிஎல் ஏலத்தின் போது நடைபெற்றதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை பெறவில்லை.

ஆனால் இந்த ஆட்டம் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் படை தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றினால் அது இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். இந்த நிலையில் பார்ல் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது.
இதனால் இந்தியாவுக்கு இது கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ருதுராஜ் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் இன்றைய ஆட்டம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சாய் சுதர்சன் தொடர்ந்து இரண்டு போட்டியில் அரைசதம் அடித்துள்ள நிலையில் ஹாட்ரிக் அரை சதத்தை அவர் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதேபோன்று ஐபிஎல்லில் ஜொலித்த திலக் வர்மா மீண்டும் அதே போல் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை. இதனால் அவர் மீதும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் நடுவரிசையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரிங்கு சிங் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் ரஜத் பட்டிதாருக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் ரிங்கு சிங் அல்லது திலக் வர்மாவுக்கு பதிலாக ரஜத் பட்டிதாருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பந்துவீச்சை பொறுத்தவரை கடந்த போட்டியில் குல்தீப் மோசமாக செயல்பட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டும். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை அணியில் எந்த மாற்றமும் இருக்காது.