நவி மும்பை: இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்ததை நேரில் கண்ட, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த காட்சி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக இடம்பிடித்தது.
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்குள் சுருட்டி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீப்தி ஷர்மா கடைசி விக்கெட்டை வீழ்த்தியதும் மைதானமே அதிர்ந்தது. வீராங்கனைகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வெற்றிக் களிப்பில் மிதந்தனர்.

அந்தத் தருணத்தில் கேமராக்கள் பார்வையாளர் பகுதியை நோக்கித் திரும்ப, அங்கே முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, கண்கள் கலங்கி, உணர்ச்சிப் பெருக்கில் உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தார். இந்திய மகளிர் அணி உலக கிரிக்கெட்டின் உச்சியைத் தொட்ட அந்த வரலாற்றுத் தருணத்தைக் கண்ட அவரது கண்கள் ஆனந்தத்தில் பனித்தன.
ரோஹித் சர்மாவின் இந்த ஆனந்தக் கண்ணீருக்குப் பின்னால், ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. இரண்டு முறை டி20 உலகக்கோப்பை (2007, 2024), 2025ல் சாம்பியன்ஸ் டிராபி எனப் பல கோப்பைகளை வென்றிருந்தாலும், ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் விளையாடி, அந்தக் கனவை நனவாக்க அவர் இன்னும் போராடி வருகிறார். தனக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை, இந்திய மகளிர் அணி வென்றதைக் கண்டபோது, ஒரு சக வீரராக, ஒரு முன்னாள் கேப்டனாக, ஒரு ரசிகனாக அவர் அடைந்த பெருமிதமும், ஆனந்தமும் கண்ணீராக வெளிப்பட்டது. 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை ரோஹித் சர்மாவுக்காக இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.