கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தார். டாஸ் வென்ற இலங்கை அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இலங்கை அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் கமிண்டோ மெண்டிஸ் ஆகியோர் தலா 40 ரன்கள் எடுத்தனர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்தியா களமிறங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகளம் கடைசி நேரத்தில் தோய்வாக மாறியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என இந்திய அணி நினைத்தது. வழக்கம்போல் கில் பொறுமையாக ரன்கள் சேர்க்க அதிரடியாக ஆட வேண்டிய பொறுப்பு ரோகித் சர்மா தலையில் வந்து விழுந்தது.
எனினும் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக விளையாடினார். வழக்கம்போல் பவுண்டரி, சிக்சர் என விரட்டிய ரோகித் சர்மா இலங்கையின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார். ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த இலங்கை அணி தடுமாறியது.
இதன் மூலம் 29 பந்துகளில் எல்லாம் ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். இந்திய அணி 6.5 ஓவர்களில் 50 ரன்கள் கடந்தது. இன்னும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 145 என்று அளவில் இருந்தது.
மறுமுனையில் பொறுமையாக விளையாடிய கில் 44 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ரோகித் சர்மா, கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தது.