பார்பிடாஸ் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஏழு மணிக்கு தொடங்குகிறது.
முதல் போட்டி நடந்த பார்படாஸ் மைதானத்தில் தான் இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக விளையாடி 114 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியும் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் அமைக்கப்பட்டதாக இரு அணி கேப்டன்களும் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காவது உருப்படியான ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஏனெனில் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக வேண்டிய சூழல் இருப்பதால் சவாலான போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் பேட்டிங் செய்யவே தகுதி இல்லாத மைதானத்தில் விளையாடுவது நேரத்தை தான் வீணடிக்கும் செயல். இந்தப் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
சுப்மன் கில்லுக்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 6 இன்னிங்ஸிலும் அவர் 30 ரன்கள் கூட தொடவில்லை. மேலும் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனையாவது அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை எந்த மாற்றமும் அணியில் இருக்காது என தெரிகிறது.
இந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தில் மழை பாதிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 சதவீதத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடந்த போட்டியில் பேட்டிங் வரிசை மாற்றம் செய்யப்பட்டது போல் இன்றைய ஆட்டத்தில் மாற்றம் செய்யாமல் இந்திய அணி சரியான முறையில் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்களின் கோரிக்கையாகும்.