டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், மற்றுமொரு படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியது முற்றிலும் வேறொரு அணிஎன்பது போல ஆடியது. தோல்வியின் விளிம்பில் இருந்த ஒரு அணி, இப்போது போட்டியையே டிரா செய்யும் அளவிற்குப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நம்பமுடியாத மாற்றத்திற்குப் பின்னால் இருப்பது பிரையன் லாரா தான்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓய்வறைக்கு சென்றார் ஜாம்பவான் பிரையன் லாரா. அப்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதிநிலை மற்றும் கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டி அணி வீரர்கள் மற்றும் கேப்டனிடம் சில கேள்விகளை கேட்டார். அதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் எழுச்சிக்கு முக்கிய காரணம்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், டெல்லி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணியின் ஆதிக்கத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியதைக் கண்டு வேதனையடைந்த லாரா, நேரடியாக அந்த அணியின் ஓய்வறைக்குச் சென்றார். அப்போது லாரா எழுப்பிய முக்கியக் கேள்வி: "உங்களுக்குக் கிரிக்கெட் மீது உண்மையிலேயே காதல் இருக்கிறதா? வெஸ்ட் இண்டீஸுக்காக விளையாட வேண்டும் என்ற தாகம் உண்மையிலேயே இருக்கிறதா?" என்பதுதான்.
"30-40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இதைவிடச் சிறந்த வசதிகள் இல்லை. ஆனால், எங்களிடம் தேசத்திற்காக விளையாட வேண்டும் என்ற தாகமும், பேரார்வமும் வித்தியாசமாக இருந்தது" என்று அவர் சுட்டிக்காட்டிய வார்த்தைகள், வீரர்களின் மனதில் ஒரு தீப்பொறியைப் பற்றவைத்திருக்க வேண்டும்.

லாராவின் இந்த வார்த்தைகளின் விளைவு, மூன்றாம் நாள் ஆட்டத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 175 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், கீழ் வரிசை வீரர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. 9-வது விக்கெட்டுக்கு காரி பியர் மற்றும் ஆண்டர்சன் பிலிப் 46 ரன்கள் சேர்த்து, போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
உண்மையான மாற்றம் ஃபாலோ-ஆனுக்கு பிறகு தான் வெளிப்பட்டது. 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய ஜான் கேம்ப்பெல் (87*) மற்றும் ஷாய் ஹோப் (66*) ஆகியோர், இந்தியப் பந்துவீச்சைச் சிதறடித்தனர். குறிப்பாக, 6 ஆண்டுகளாக டெஸ்ட் அரைசதம் அடிக்காமல் தவித்த ஷாய் ஹோப், தனது நீண்ட கால தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, உணர்ச்சிப்பூர்வமான அரைசதத்தைப் பதிவு செய்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 97 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. கடினம் என்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 450க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். அப்படி நடந்தால், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி கடினமான சேஸிங்கை செய்ய வேண்டி இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் வருகையும், அவர் எழுப்பிய சில சுயமரியாதையைத் தூண்டும் கேள்விகளும்தான், இந்த எழுச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியை அவர்கள் டிரா செய்தால், அது வெற்றிக்கு நிகரானதாகவே கருதப்படும்.