15 வீரர்கள் கொண்ட அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் "டை"யும் செய்துள்ளது. இரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
முகம்மது ஷமி நீக்கம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத முகம்மது ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தடுமாறிய இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிட்ட இந்திய அணி, முக்கிய வீரர்களான பும்ரா, புவனேஸ்வர் குமாரை முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கவில்லை. அதனால், இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் தடுமாறியது. கடைசி சில ஓவர்கள் செலுத்திய ஆதிக்கத்தால், போட்டியை டை செய்ய முடிந்தது. பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகிய இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்களை ஓய்வில் வைத்து பாதுகாத்து வருகிறது இந்திய அணி நிர்வாகம். அவர்களை முக்கிய போட்டிகளில் மட்டுமே பயன்படுத்துவது என்ற திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.
பும்ரா, புவியால் இந்தியா வெல்லும்
அவர்கள் இல்லாத இந்திய பந்துவீச்சு மிக பலவீனமானது என தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் கூட பும்ரா, புவனேஸ்வர் சேர்க்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு முன் ஒரு பயிற்சி போலத் தான் என தோன்றுகிறது. எப்படி இருந்தாலும், இவர்களின் வரவால் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெறும் என யூகிக்க முடியும்.
அணி விவரம்
கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் - விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ், ராகுல், மனிஷ் பாண்டே