மும்பை : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பைனல் கவுண்டவுனாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் என மூன்று தொடர் மட்டும் தான் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாட இருக்கிறது.

இந்தத் தொடரை வைத்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் என்பது முடிவு செய்யப்படும். தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் ரோகித் ஒரு நாள் தொடரில் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என தெரிகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா ஒரு மிரட்டலான சாதனையை படைக்க இருக்கிறார். ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 175 ரன்கள் சேர்த்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர் என்று பெருமையை பெறுவார். மேலும் இந்த மைல் கல்லை எட்டிய ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு சொந்தமாகும்.
ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட், தோனி ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டுக்குள் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியையும் டிராவிட்டையும் முந்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் என்ற மைல்களை தொட 102 ரன்கள் தான் தேவை. மேலும் இந்த தொடரில் அவர் மூன்று சதங்களை அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்து விடுவார்.