
கோலி ஏமாற்றம்
ஆனால் இந்த போட்டியில் விராட் கோலி தான் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். நேற்றைய போட்டியில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் வெறும் 8 ரன்களுக்கு மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அவர் காட்டிய ஆக்ரோஷம் தான் காரணம்.

விராட் கோலியின் பிரச்சினை
விராட் கோலிக்கு தொடக்கத்திலேயே பவுன்சர் பந்துகளாக போடப்பட்டு சோதிக்கப்பட்டன. அதனால் அவர் முதல் 2 பந்துகளில் தொடர்ந்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் அதனையே வியூகமாக அமைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், கோலியின் ஆக்ரோஷத்தை தூண்டி அடுத்தடுத்து பந்தை நன்கு பவுன்சருக்கு செல்லும்படி போட்டனர்.
இந்த வலையில் சிக்கிய விராட் கோலி, தான் சந்தித்த 4வது பந்திலேயே அவுட்டானார். அல்சாரி ஜோசஃப் போட்ட பவுன்சர் பந்தை ஹூக் ஷாட் ஆடி தூக்கி அடிக்க முயன்ற போது, பேட்டின் நுணியில் எட்ஜாகி கேட்ச்சானது. விராட் கோலியின் பலவீனமாக பவுன்சர் பந்து தான் உள்ளது. இலக்கு குறைவாக இருந்த போதும், அவர் அப்படி தேவையின்றி அதிரடி காட்ட முயன்றது விமர்சனங்களை பெற்று வருகிறது.

கவாஸ்கர் விளக்கம்
இந்நிலையில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், தென்னாப்பிரிக்க தொடரிலும் கோலி இதே பிரச்சினையை சந்தித்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என பவுன்சர் பந்துகளிலேயே சிக்கி அவுட்டானார். விராட் கோலிக்கு பவுன்சர் பந்து போட்டால் ஹூக் ஷாட் அடிப்பது மிகவும் பிடிக்கும். அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே நிதானமின்றி ஆடி விடுகிறார்.

கவனம் தேவை
இதுபோன்ற சமயங்களில் விராட் கோலி கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியான பவுன்ஸ் ஆகப்போகிறது என்பதை கணித்து செயல்பட்டிருக்க வேண்டும். இனி வரும் போட்டியில் நிதானமாக விளையாடாவிட்டால் பிரச்சினைகளை சந்திப்பார் என நினைக்கிறேன். எனவே கவனமாக பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications