
இந்திய அணி மாற்றம்
முன்னதாக, இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல், வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்தனர். இரண்டாவது டி20 போட்டியில் ஆடிய மற்ற வீரர்கள் அப்படியே இடம் பெற்றனர். ரோஹித், 69 ரன்களை கடந்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அவர் இந்த போட்டியில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றமில்லை
வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் இந்த இந்திய சுற்றுப் பயணம் முழுவதும் ஏராளமான வீரர்களை அறிமுகம் செய்தது. மூத்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காதது அவர்களுக்கு பின்னடைவாக உள்ளது.

அணி வீரர்கள் விவரம்
இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி - டேர்ரன் பிராவோ, ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), கீமோ பால், ஃபேபியன் ஆலென், கேரி பியர்ரே, ஓஷேன் தாமஸ், நிகோலஸ் பூரன்.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஹோப் மற்றும் ஹெட்மையர் துவக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடியாக 51 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியின் சாஹல் தன் சுழல் ஜாலத்தால் இவர்கள் இருவரையும் வெளியேற்றினார். அடுத்து தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ராம்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.அடுத்து ஜோடி சேர்ந்த பிராவோ, பூரன் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இளம் வீரர் பூரன் அதிரடியாக ஆடி 4 சிக்ஸர்கள் அடித்து 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். பிராவோ 43, பூரன் 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றனர்.

இந்திய அணி பேட்டிங்
182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது இந்தியா. ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். ரோஹித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 2-3 ஓவர்களுக்கு நிதானம் காட்டி ஆடியது. அதன் விளைவாக ரன் ரேட் தேவை ஓவருக்கு பத்துக்கு மேல் எகிறியது. எனினும், அடுத்த சில ஓவர்களில் ரிஷப், தவான் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். தவான் அரைசதம் கடந்து சதம் நெருங்கினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தவான் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 1 பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆலென் வீசிய பந்தை அவரிடமே அடித்தார் பாண்டே. ஆலென் பந்தை விட்டு விடவே, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் இருவரும் ஒரு ரன்னை ஓடி முடித்தனர். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 19வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததால், இந்தியா தேவையில்லாமல் கடைசி பந்து வரை போட்டியை இழுத்துச் சென்றது.


Click it and Unblock the Notifications