பாசடெர்ரே, செயின்ட் கிட்ஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான 2வது பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்தது. பேட்டிங்கில் இந்தியா கலக்கியிருந்த நிலையில் பவுலிங்கில் சொதப்பியது. ஆர்.அஸ்வின் மட்டுமே சற்றே சிறப்பாக பந்து வீசினார்.
3வது மற்றும் இறுதி நாளான இன்று இந்திய பவுலர்களின் சொதப்பல் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. முன்னதாக முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களைக் குவித்திருந்தது. கோஹ்லி, ஜடேஜா, ராகுல் ஆகியோர் அரை சதம் போட்டிருந்தனர்.

பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியை முடக்க இந்திய பவுலர்கள் திணறிப் போய் விட்டனர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் போர்டு லெவன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
அஸ்வின் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அவர் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். மற்ற இந்திய பவுலர்கள் சரிவர பந்து வீசவில்லை. சொதப்பி விட்டனர்.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 21ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கவுள்ளது.