மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி எதிர்கொண்டுள்ளது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி உடன் இந்தியா விளையாடி வருகிறது. இதன் பிறகு மார்ச் முதல் மே மாதம் வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
அதன் பிறகு ஜூன் மாதம் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி ஐசிசி t20 உலக கோப்பையை 2007 ஆம் ஆண்டு தான் வென்றது.

அதன் பிறகு அந்தத் தொடரில் நாம் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரே ஒருமுறை 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு அரையிறுதி சுற்றை தாண்ட முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய டி20 அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள்.
இந்த t20 உலக கோப்பை தொடர் தான் அவர்களுக்கு கடைசி வாய்ப்பாகும். இந்த தொடருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இருவரும் இந்த முடிவை எடுக்க உள்ளனர்.
டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு இந்திய அணி எந்த தொடரில் சென்று விளையாடும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதற்கான விடை தற்போது தெரிய வந்துள்ளது. டி20 உலக கோப்பை ஜூன் மாதம் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் ஜூலை மாதம் இலங்கைக்கு செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது.ஆனால் அந்த தொடருக்கு முன்பே தற்போது பிசிசிஐ ஒரு புதிய தொடரை அறிவித்திருக்கிறது.
அதன்படி டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சென்று ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 ஜூலை 6ஆம் தேதியும், இரண்டாவது டி20 ஜூலை 7ஆம் தேதியும், மூன்றாவது t20 ஜூலை 10ஆம் தேதியும், நான்காவது டி20 ஜூலை 13ஆம் தேதியும், ஐந்தாவது டி20 ஜூலை 14ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் அனைத்தும் ஹராரேவில் நடைபெறுகிறது. இதில் ஒரு போட்டி மட்டும் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா செல்லும் முதல் தொடராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.