சென்னை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே அணி, தங்களது முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு புத்திசாலித்தனமாக விளையாடும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களைக் குவித்து, தொடரின் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அதேபோல், இந்திய அணியும் தனது முந்தைய போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள முக்கியமான சூப்பர் 8 போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் உள்ளதால், இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள போட்டி குறித்துப் பேசிய ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ், "இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் எவ்வாறு செயல்பட்டதோ, அதே போன்ற அதிரடியான அணுகுமுறையையே இந்திய அணியும் பின்பற்றும். அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி முழு பலத்துடன் விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.
முந்தைய போட்டியில் செய்த தவறுகள் குறித்துப் பேசிய அவர், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். நெருக்கடியான நேரங்களை எவ்வாறு கையாள்வது, அந்தத் தருணங்களில் அமைதியாக இருந்து எப்படி முடிவுகளை எடுப்பது மற்றும் பேட்டர்களின் ஆட்டத்தை எப்படி சீர்குலைப்பது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். வியூகங்களில் சில மாற்றங்களைச் செய்ய முயன்று வருகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், தங்கள் அணியின் பந்துவீச்சு குறித்து விமர்சித்த சம்மன்ஸ், "எங்கள் பந்துவீச்சு வியூகம் பேட்டர்கள் முன்கூட்டியே கணிக்கும்படி மிகவும் சாதாரணமாக அமைந்திருந்தது ஒரு முக்கிய தவறாகும். இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்" என்று ஒப்புக்கொண்டார்.
சென்னை மைதானம் குறித்துப் பேசிய அவர், "மும்பையுடன் ஒப்பிடுகையில் சென்னை மைதானம் சற்று பெரியதாகும். பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், அது எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறோம். அங்கு எங்கள் பந்துவீச்சுத் திட்டங்களைச் செயல்படுத்துவது சற்று எளிதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும். அதே வேளையில், தங்களது முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு வர ஜிம்பாப்வே அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
