லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காமல் விட்டதற்காக கடைசி இரு நாட்களில் இந்திய அணியினர் கவலைப்படுவார்கள் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காமல் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணி நிச்சயம் அஸ்வினுடன் களமிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஆனால் ஆடுகளம் மற்றும் சூழலே காரணம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா, வார்னர், டிராவிஸ் ஹெட் என்று இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஸ்வினை எடுக்காமல் இந்திய அணி தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்த பிட்ச் குறித்து நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் பேசுகையில், ஓவல் பிட்ச் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் கடைசி இரு நாட்கள் நிச்சயமாக சுழலுக்கு தான் சாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வர்ணனையின் போது ரிக்கி பாண்டிங் பேசுகையில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. புதிய பந்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்புகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது. ஆனால் ஆட்டம் சில நாட்கள் கடந்த பின், நிச்சயம் ஆடுகளத்தில் ஸ்பின் இருக்கும். பந்து ஸ்பின்னாகும் போது, ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்த அஸ்வினின் தேவை இந்திய அணிக்கு இருக்கும். ஆனால் அப்போது அஸ்வினால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் பற்றிய ரிக்கி பாண்டிங்கின் பேச்சு இந்திய ரசிகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போதும் ஸ்பின் எடுபடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் சுழலுக்கு சாதகமில்லாத மைதானத்தில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியமளித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து நிலவி வருகிறது.