மும்பை: அனைத்து மதத்திற்கும் இடம் உண்டு, எம்மதமும் சம்மதம், மதத்தில் வேறுபாடு இல்லாத நாடு என இந்தியாவை உலகம் கொண்டாடி வரும் நிலையில் அதனை மீண்டும் உண்மை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நிரூபித்திருக்கிறது.
உலகம் முழுவதும் சாதி, மதம், நிறவெறி என பிரிவினை உள்ள நிலையில் அந்த நோய் இந்தியாவையும் ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கிப்போட்டு இதுதான் இந்தியாவின் உண்மையான டிஎன்ஏ என்பதை நேற்றைய இந்தியா, ஆஸ்திரேலிய மகளிர் உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டம் காண்பித்து இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் ஒரு கிரிக்கெட் வீரர் வெற்றிக்கு பின்பு பேசினால் பிஸ்மில்லா அல்லது அல்ஹம்துலில்லாஹ் போன்ற வார்த்தையை பயன்படுத்துவார். ஆனால் பாகிஸ்தான் அணியில் 99 சதவீதம் வேறு மதத்தினர் விளையாட வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தியாவில் மதத்திற்கு பெரிய அளவு முக்கியத்துவம் தராமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்கள் உச்ச நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார்கள்.
அசாருதீன் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் கேப்டன் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். நேற்று 339 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய மகளிர் அணி புதிய சாதனை படைத்தது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நாக்அவுட் சுற்றில் அதிகபட்சமாக துரத்தப்பட்ட ஸ்கோர் என்ற பெருமை கிடைத்திருக்கிறது. இந்த போட்டிக்கு பின் பேசிய ஜெமிமா, இயேசுவுக்கு நன்றி என்றும் பைபிள் வசனத்தை சுட்டிக்காட்டி நீ களத்தில் நில் உனக்காக நான் சண்டை செய்கிறேன் என்று இறைவனின் வாக்கை பேசினார்.
இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே மூன்று மதத்திற்கும் முக்கிய த்துவம் அளிக்கப்படும். இதற்கு சான்று 2007 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களது பயணத்தை தொடங்கும் போது ராபின் உத்தப்பா தான் கிறிஸ்தவ மத வழிபாட்டை நடத்தி தொடரை ஆரம்பித்து வைத்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
முகமது ஷமி விமர்சிக்கப்படும் போது, அதனை எதிர்த்து விராட் கோலி குரல் கொடுப்பார். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை சிமர்சிக்கும் போது, அதற்கு முதலில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்புவது இர்பான் பதான். இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மதத்திற்கும் இடம் உண்டு. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை இன்னும் மேலோங்கி இருப்பதையே காட்டுவதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஜெய்ஸ்ரீராம், அல்ஹம்துலில்லாஹ், இயேசு வாழியவே போன்ற பல நாமங்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பது தான் இந்தியாவின் அழகு என்றும் இதை யாராலும் மாற்ற முடியாது என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.