மும்பை : இந்திய மகளிர் அணியின் இளம் நட்சத்திர வீராங்கனையான ஜெமிமாவின் உறுப்பினர் அங்கீகாரத்தை மும்பையில் உள்ள பிரபல கர் ஜிம்கானா கிரிக்கெட் சங்கம் ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.24 வயதான ஜெமிமா இந்தியாவுக்காக மூன்று சர்வதேச டெஸ்ட், முப்பது சர்வதேச ஒரு நாள் மற்றும் 104 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.
இந்தியாவுக்காக சர்வதேச அளவில் 3000 ரன்களை ஜெமிமா அடித்திருக்கிறார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு ஜெமிமாவுக்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், மும்பையை சேர்ந்த ஜெமிமா, கர் ஜிம்கானா கிரிக்கெட் சங்கத்தின் கெளரவ உறுப்பினராக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெமிமாவின் தந்தை சங்கத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி கர் ஜிம்கானா சங்கத்திற்கு சொந்தமான ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஜெமிமாவின் தந்தை கிறிஸ்தவ மத போதனைகளை நடத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கர்த்தர் உங்களை காப்பாற்றுவார்! கர்த்தர் பக்கம் வாருங்கள் என்ற தலைப்புகளில் ஜெப கூட்டங்களும் நடந்து இருக்கிறது.
மேலும் கிறிஸ்தவ பாடல்கள், இசை நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி மத மாற்றத்தில் ஈடுபட ஜெமிமாவின் தந்தை முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து சங்க விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதால், ஜெமிமாவின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்து ஜிம்கானா கிரிக்கெட் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கார் ஜிம்கானா சங்கத்தின் தலைவர் விவேக் தேவனானி, ஜெமிமாவுக்கு நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கான கௌரவ உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினோம். ஆனால் ஜெமிமாவின் தந்தை இதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். எங்கள் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தை பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை பரப்ப 35 நிகழ்ச்சிகளை அவர் நடத்தி இருக்கிறார்.
இதை எங்களால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் சங்க விதிகளின்படி மத ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. இதனால் ஜெமிமாவுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்து இருக்கிறோம் என்று விவேக் தேவனானி கூறியுள்ளார்.