மும்பை : இந்திய மகளிர் அணியின் ஆல் - ரவுண்டர் தீப்தி சர்மா வெறும் 7 ரன் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பெரிய வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்.
இந்திய மகளிர் அணி - இங்கிலாந்து மகளிர் அணி ஆடி வரும் டெஸ்ட் போட்டியில் தீப்தி சர்மா சிறப்பாக பந்து வீசி இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் அரைசதமும் அடித்த அவர், பல்வேறு சாதனைகளையும் செய்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்து இமாலய வரலாற்று சாதனை நிகழ்த்தி இருந்தது. சுமார் 88 ஆண்டுகளுக்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டது. முதல் இன்னிங்க்ஸில் தீப்தி சர்மா உட்பட நான்கு வீராங்கனைகள் அரைசதம் அடித்து இருந்தனர்.

அடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 428 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு நாட் சைவர் பிரன்ட் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் 59 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் யாரும் 12 ரன்களை கூட தாண்டவில்லை. ஒரு கட்டத்தில் 108 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இருந்த அந்த அணி 136 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அதற்கு முக்கிய காரணம், 26வது ஓவரின் போது பந்து வீச வந்த தீப்தி சர்மா தான்.
தீப்தி சர்மா 5.3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 4 மெய்டன் ஓவர்களை வீசி இருந்தார். மகளிர் டெஸ்ட்டில் 5 விக்கெட் அல்லது அதற்கும் மேல் வீழ்த்த மிகக் குறைந்த ஓவர்களை எடுத்துக் கொண்ட இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக இந்தியாவின் கார்கி பேனர்ஜி 1985 டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 9.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
88 வருட கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப் போட்ட இந்திய மகளிர் அணி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இமாலய சாதனை
மேலும், 67 ரன்கள் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சுபாங்கி குல்கர்னி 79 ரன்கள் மற்றும் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.