ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் ட்ரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இதன்பின் சவாலான இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிங் - மேயர்ஸ் இணை களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் முதல் ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்திலேயே கிங் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான மேயர்ஸ் 3 ரன்களிலும், 7வது ஓவரில் கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய உனாத்கட் அட்டாக்கில் வந்து கேசி கார்ட்டியை 6 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து தாக்கூர் வீசிய 12வது ஓவரில் அதிரடிய் வீரர் ஹெட்மயர் 4 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.
பின்னர் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்து ஒருமுனையில் போராடிக் கொண்டிருந்த அதனேஸை 32 ரன்களிலும், கரியாவை 19 ரன்களிலும் வீழ்த்தி அசத்தினார். 9வது விக்கெட்டுக்கு அல்ஹாரி ஜோசப் - மோட்டீ இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் தாக்கூர் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜெய்டனை 1 ரன்னில் வீழ்த்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களுக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இந்திய அணி தரப்பில் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. மேலும் ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும், தொடர் நாயகனாக இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டனர்.