பார்படாஸ் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 2வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி டி20 உலககோப்பையை வென்று அசத்தி இருக்கிறது.
பார்படாசில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்திய அணி ஐசிசி (சாம்பியன் டிராபி 2013) தொடரை வென்று 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நூறு கோடி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதன் அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல், அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அக்சர் பட்டேல் 47 ரன்களில் ரன் அவுட் ஆக, ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடி வந்த விராட் கோலி இறுதியில் பட்டையை கிளப்பினார்.
48 பந்துகளில் அரைசதம் கடந்த விராட் கோலி அதன் பிறகு அதிரடியை காட்டினார். இதன் மூலம் 59 பந்துகளில் விராட் கோலி 76 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று இந்த தொடர் முழுவதும் சொதப்பிய சிவம் துபே பைனலில் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
ஹர்திக் பாண்டியா ஐந்து ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் கேசவ் மகராஜ் மற்றும் ஆண்டிரிச் நோக்கியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.
இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரிசா ஹென்றிக்ஸ், நான்கு ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் அபார பந்துவீச்சால் போல்ட் ஆனார். இதேபோன்று கேப்டன் மார்க்கரம் நான்கு ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா அணி 12 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் குயின்டன் டிகாக், ஸ்டெப்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.
ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று குயிண்டன் டி காக் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஃபெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.
ஆனால் நடு வரிசையில் களமிறங்கிய ஹென்றிகா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை பொளந்து எடுத்தனர். குறிப்பாக அக்சர் பட்டேல் வீசிய 15 ஓவரில் கிளாசன் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 24 ரன்களை அடித்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. 24 பந்துக்கு 26 எண்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் கிளாசென் ஆட்டம் இழந்தார். அவர் 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார், இதில் 5 சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இதனால் இந்தியாவுக்கு மீண்டும் வெற்றிக் கதவு திறந்தது.
ஹர்திக் 17வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனையடுத்து 18வது ஓவரை பும்ரா வீச, தென்னாப்பிரிக்கா ரன் சேர்க்க தடுமாறியது. அந்த ஓவரில் 4வது பந்தில் மார்கோ யான்சென் போல்ட் ஆனார். பும்ரா இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்பாது ஆர்ஷ்தீப் சிங் 19வது ஓவரில் 4 ரன்கள் தான் விட்டு கொடுத்தார், இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஹர்திக் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் தூக்கி அடிக்க, அதை சிக்சர் லைனில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். இதனையடுத்து 2வது பந்தில் ரபாடா பவுண்டரி அடிக்க, தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 4 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 3வது மற்றும் 4வது பந்து சிங்கிள் எடுக்க, 5வது பந்து Wide ஆக மாறியது. இதனையடுத்து 5வது பந்தில் ரபாடா ஆட்டமிழக்க, ஒரு பந்துக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் கடை0ச பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.