லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் வீசிய பந்தில் இந்திய அணியின் ரஹானே 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் விளாசி சாதனை படைத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ததால், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

ஆனால் தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தன. சரி புஜாரா - விராட் கோலி கூட்டணி இந்தியாவை கரை சேர்க்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதனால் 512 நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய ரஹானே காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர்.
ஆனால் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கம்மின்ஸ் வீசிய பந்து ரஹானேவின் பின் காலில் பட்டு சென்றது. இதையடுத்து கள நடுவரும் ஆவுட் என்று விரலை உயர்த்த, இந்திய அணி ரசிகர்கள் ஒரு நிமிடம் தலைமை குனிந்தனர். ஆனால் ரஹானே உடனடியாக மேல்முறையீடு செய்ய, பின்னர் மூன்றாம் நடுவர் நோ-பால் பரிசோதனை செய்தார். அதில் கம்மின்ஸ் நோ-பால் வீசியது தெரிய வந்தது. இதனால் இந்திய அணி உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.