லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் இரு நட்சத்திர ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை தேர்வு செய்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆச்சரியம் கொடுத்துள்ளார்.
ஜூன் 7ஆம் தேதி நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இரு அணிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமென்பதால், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆட்டம் நடக்கிறது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் எச்சரித்து வருகின்றனர். ஏனென்றால் இங்கிலாந்தில் அதிகளவு சுழற்பந்துவீச்சு எடுபடாது என்பதால், ஒரேயொரு ஸ்பின்னருடன் களமிறங்குவதே சரி என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா யாரை தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அதில் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎஸ் பரத், ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஓவல் மைதானத்தில் வெயில் வந்தால் மட்டுமே பந்து ஸ்பின்னாகும் என்பதால், எப்படி இரு ஸ்பின்னர்களை களமிறக்க முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அதேபோல் ஓவல் மைதானத்தில் கண்டிப்பாக வெயில் வரும் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இதனால் அஸ்வின் அணியில் இருக்க வேண்டும். அதேபோல் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஷர்துல் தாக்கூர் நிச்சயம் சிறந்த உதவியை அளிக்க கூடிய வீரர். அதனால் தான் உமேஷ் யாதவிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை தேர்வு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.